உலகின் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு என்பதையும் தாண்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகளவில் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை இந்தப் போட்டியின் தாக்கம்.
மக்களின் எதிர்பார்ப்புகள் என்ற ஒன்று இதன் மீது எந்த அளவிற்கு உள்ளது? அதற்கான காரணம் என்னவாக இருக்கலாம்? என்பது குறித்துக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் [மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம்.](https://minnambalam.com/k/2017/06/02/1496341820) அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் சாதாரணப் போட்டிகளுக்கே பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும் பட்சத்தில், நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களையும் தொலைக்காட்சியின் முன் அமரவைக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
இதுவரை இங்கிலாந்து அணி விளையாடியுள்ள அனைத்து லீக் போட்டிகளும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக இரண்டு லீக் போட்டிகளில் வெற்றிபெற்று நல்ல ஃபார்மில் உள்ளது. இதுவரை 3 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணி ஒருமுறையும் வெற்றிகண்டதில்லை. இருப்பினும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்து அணியை வீழ்த்த உதவினால் இறுதிப்போட்டி வாய்ப்பை முதல் முறையாகப் பாகிஸ்தான் அணி பெறும்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியுடன் மோதும் இந்திய அணி, இதற்கு முன்னரே பயிற்சி ஆட்டத்தின் போது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிபெறும் பட்சத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்த போட்டியானது மிக அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என்றே கூறலாம்.
�,”