குஜராத் மாநிலத்தில், 2015ஆம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தின் போது, பாஜக எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில், போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் உள்ளிட்ட இருவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தை ஹர்திக் படேல் தலைமை தாங்கி நடத்தினார். இந்தப்போராட்டத்தின் போது அகமதாபாத் விஸ்நகரில் உள்ள பாஜக எம்எல்ஏ ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் சூறையாடப்பட்டது. மேலும் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் படேல் உட்பட ‘படிதார் அனாமத் அந்தோலன்’ அமைப்பின் தலைவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜூலை 23, 2015 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹர்திக் படேல் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது விஸ்நகரின் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய விஸ்நகர் நீதிமன்ற நீதிபதி வி.பி. அகர்வால், குற்றம்சாட்டப்பட்ட ஹர்திக் படேல் உள்ளிட்ட இருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மீதம் உள்ளவர்கள் மீது போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் கூறினார். ஹர்திக் படேல், லால்ஜி படேல் மற்றும் சர்தார் படேல் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.�,