அமைச்சர் சரோஜா தன்னுடைய தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜமீனாட்சி தெரிவித்துள்ளார்.
மே 10ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறிய தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி,’ கடந்த 7ஆம் தேதி சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வீட்டில் அவரும் அவரது கணவரும் தன்னிடம் பணியைத் தொடர்வதற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், இல்லையென்றால் வேலையைவிட்டு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியதாக’ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் மே 11ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து அமைச்சர் சரோஜா மீது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜமீனாட்சி,’ என்னுடைய பணியிட மாற்றத்திற்காக எனது தந்தையிடம் அமைச்சர் சரோஜா 10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கியுள்ளார். இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. கடந்த 7ஆம் தேதி என்னுடைய வேலையை ராஜினாமா செய்யச்சொல்லி சரோஜா அவரது வீட்டில் வைத்து என்னை மிரட்டினார். குழந்தைகள் நல அலுவலர் பதவி ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படுவதாகவும், வேலையை ராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன்’எனவும் மிரட்டினார்.
ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் என்னுடைய வேலையை நான் ராஜினாமா செய்ய மாட்டேன். என்னுடைய உயிருக்கும், வேலைக்கும் பாதுகாப்பு வேண்டும். சமூக நலத்துறையிலேயே இப்படி லஞ்சம் தலைவிரித்தாடினால் பெண்களுக்கான பாதுகாப்பு இங்கு எப்படி இருக்கும். என்னுடைய புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு அனுப்புவதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்’ என்று கூறினார்.�,