அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டுமென கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்து பயங்கரவாதம் உண்டாவதை எவனும் தடுக்க முடியாது” என்று பேசியிருந்தார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டுமென ஆளுநரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அமைச்சரை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அழகிரி, “திருச்சியில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா? சமீபகாலமாக பா.ஜ.க. வின் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி மாறியது ஏன்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்துள்ளார்.
மேலும், “ராஜேந்திர பாலாஜியின் பேட்டியைப் பார்க்கின்ற எவரும் இவரை ஒரு மனநோயாளியாகத்தான் பார்ப்பார்கள். இவரது பேச்சை ஆய்வு செய்கிற எவரும் இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். ஏனெனில், இவரது பேச்சு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்களிடையே வன்மத்தை வளர்த்து கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து முதலமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ள அழகிரி,
“மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
“இவரது பேச்சு அப்பட்டமான சட்டவிரோதமாக அமைந்திருப்பதால் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது” என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.�,