அமைச்சர்களுக்கு வந்த பயம் : தினகரன் கூறிய விளக்கம்!

Published On:

| By Balaji

இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்தது, அந்நியச் செலாவணி வழக்கு என்று தினகரன் மீது பல நெருக்கடிகள் வந்தநிலையில், அதிமுக கட்சியைக் காப்பாற்ற வேண்டி சசிகலா, தினகரன் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கிவைத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி தெரிவித்தார். இதையடுத்து, ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டம் நடைபெறுவதாக முதலில் தினகரன் அறிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இன்று ராயப்பேட்டையில் நடக்கவிருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடந்த 5 நாட்களிலேயே அமைச்சர்கள் என்னை திடீரென நீக்க, ஏதோ ஒரு பயம்தான் காரணமாக உள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. ஒருசிலருக்கு உள்ள பயத்தால் என்னை ஒதுக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை நீக்குவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நன்மை என்றால் நான் விலகத் தயார். நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் நானும் கலந்துகொண்டிருப்பேன். அவசர கதியில் அமைச்சர்கள் தவறாக முடிவெடுத்துள்ளனர்’ என்றார்.

முன்னதாக, தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் பேசியபோது, ‘கடந்த 14ஆம் தேதி வரை என்னை நேரில் வந்து சந்தித்த அமைச்சர்களுக்கு திடீரென பயம் வந்துள்ளது. இது என்ன பயம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உணவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் சமூக நலத்துறை போன்ற அதிகளவில் பணம் புரளக்கூடிய முக்கியத் துறைகளில் இருந்தவர்கள் என்னென்ன தவறு செய்துள்ளார்கள், எங்கெல்லாம் சொத்து வைத்துள்ளார்கள் என்று மத்திய அரசில் லிஸ்ட் தயார் செய்துள்ளார்கள். அதன்பேரில், அவர்களுக்கெல்லாம் மத்திய அரசிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மத்திய அரசின் மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்’ என்று அமைச்சர்களின் பயத்துக்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share