<அமலா பாலின் சாகசங்கள்!

Published On:

| By Balaji

‘அதோ அந்த பறவை போல’ திடைப்படத்தில், ‘உயர்ந்த மரங்களில் ஏறுவது உள்ளிட்ட பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளை நடிகை அமலா பால் சிறப்பாகச் செய்துள்ளார்’ என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், அமலாபாலின் கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலா பால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டு வாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இதில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாகவும், ஐ.பி.எல் வர்ணனையாளரும், ‘ஜனத்’, ‘ஹவுஸ்ஃபுல் 3’, ‘டேஞ்சரஸ் ஐசக்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலா பாலுக்கு நெருக்கமானவராக மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படம் குறித்து இயக்குநர் வினோத்திடம் நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, “படத்தின் பெரும் பகுதி வனப்பகுதிகளில் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாகத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில் அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தார்.

தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பே திட்டமிட்டோம். படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share