அதிமுக அரசுக்கு எதிரான பாமக போராட்டம் வாபஸ்: ஏன்?

Published On:

| By Balaji

அதிமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை பாமக வாபஸ் பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. ஆனால், பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளும் அதிமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பாமக, நாளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாமக நிறுவனர் ராமதாஸிடம் பொதுத் தேர்வு பற்றி போனில் பேசியதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது பாமக.

இதுபற்றி இன்று (ஜனவரி 27) அறிக்கை வெளியிட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, “பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று காலை ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ராமதாஸிடம் அமைச்சர் தெரிவித்தார். அதையேற்று நாளை பாமக நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவித்தார்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் பாமக உறுதியாக இருப்பதாகவும் அமைச்சரிடம் ராமதாஸ் தெரிவித்ததாகக் கூறியுள்ள ஜி.கே.மணி, “பொதுத் தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார். அதையேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என உறுதியளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர் முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜி.கே.மணி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share