மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பம், திமுக அரசிடம் நிர்வாக திறன் இல்லாததை வெளிக்காட்டுவதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று(டிசம்பர் 9)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பில் காவேரி ஆர்.எஸ் பகுதியில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, “தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது ஆறு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்தஆண்டு ஜூன் மாதத்திலும் ஆறு சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வருடந்தோறும் 6சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் மின்துறை சார்பில் வெளியிடப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். இது அரசின் நிர்வாக திறன் இல்லாததை காட்டுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக,
தற்போது எதற்காக மின் இணைப்புடன் மீட்டர் வைத்து வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக தனது நிதிநிலை அறிக்கையில் மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு செய்வதற்காக 13,000கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தது.
ஆனால் தற்போது எதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே குடும்பத்தில் இரண்டு மின் இணைப்பு உள்ள நிலையில் ஆதார் எண் இணைக்கும் போது 100யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள்” என்று தங்கமணி கூறினார்.
கலை.ரா