டிஜிட்டல் திண்ணை: கலைக்கப்பட்ட பிடிஆர் கனவு! சட்டமன்ற செயலகத்தில் நடப்பது முதல்வருக்குத் தெரியுமா? 

Published On:

| By Aara

தமிழக முதல்வர் ஸ்டாலின்  செப்டம்பர் 9 ஆம் தேதி மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பேசும்போது,  ‘நேற்றைய தினம் நெல்லையில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்படி வேனில் போகும்போது, சில போஸ்டர்கள், சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.

அதில் ஒரு சுவரொட்டி என்னை ரொம்பவும் கவர்ந்தது. அது என்னவென்றால், A.M… P.M… பார்க்காத C.M. அதாவது காலை மாலை பார்க்காத C.M என்று ஒட்டியிருந்தார்கள். அது ஒரு பக்கம். ஆனால் அப்போது நான் நினைத்தது என்னவென்றால், AM, PM என்பதைவிட, நான் MM – CM ஆக இருக்க விரும்புகிறேன்.

அப்படி என்றால், Minute to Minute. அதான் MM. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்ற நிலையில் MM– CM ஆக இருந்து, “T.N நம்பர்-1” என்று உருவாக வேண்டும் என்ற நிலையில், எங்கள் பணி நடந்துகொண்டு இருக்கிறது’ என்று பேசினார்.  இந்த பகுதி மட்டும் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “முதல்வர் இவ்வாறு மினிட் டு மினிட் சிஎம் ஆக இருக்க விரும்பினாலும் சட்டப்பேரவை செயலகத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் நிர்வாகத்தால் மாநில அரசே கேட்டுப் பெற்று வந்த ஓர் திறமையான அதிகாரி கடுமையான மனச் சுமையோடு வெளியே போய்விட்டார் என்பதுதான்  கோட்டை வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.  

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை 2021 ஆம் ஆண்டு  தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்,  அதன் 12 ஆம் பக்கத்தில்,  ’சட்டமன்றத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மன்றத்தில் 1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.

பேரவையின் நிதிக் குழுக்களின் (மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழு பொதுத்துறை நிறுவனங்கள் குழு)  செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்புச் செயலகம் அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ptr mkstalin assembly Secretariat

இந்த மூன்று குழுக்களும் நிதித்துறையின் கீழ் வருகின்றன. மதிப்பீட்டுக் குழு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மதிப்பீடு செய்கிறது. பொதுக் கணக்குக் குழுவானது அந்தத் திட்டங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்கிறது. இந்தக் குழுவின் தலைவர் பதவி எப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும்.

இம்முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது குழுவான பொது நிறுவனங்கள் குழுவானது பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது.  இந்த மூன்று குழுக்களும்தான் அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை பற்றிய ஆய்வை செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்கின்றன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த குழுக்களின் செயல்பாட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளன என்று கருதிய நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நிதித்துறையின் மூன்று குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்புச் செயலகம் அமைக்க முடிவு செய்தார்.

இதுகுறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுத்தான் பட்ஜெட்டிலும் அறிவித்தார். ஆனாலும் சட்டமன்ற செயலகத்திலே இருக்கும் சில பழமையான மூத்த அதிகாரிகளுக்கு பிடிஆரின் இந்த நடவடிக்கை உறுத்தியிருக்கிறது. அதனால் அவர்கள் இந்த சிறப்புச் செயலகம் அமைப்பதற்கு நிர்வாக ரீதியான சிறு சிறு தடைகளை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ptr mkstalin assembly Secretariat

ஆனால் அவற்றையெல்லாம் மீறி நிதியமைச்சர் முதல்வரிடம் ஆலோசித்து இந்த சிறப்புச் செயலகத்துக்கு பொறுப்பான அதிகாரியைத் தேடி வந்தார். அந்தத் தேடலின் முடிவில்  நாடாளுமன்ற செயலகத்தில் மூத்த இயக்குநராக பணியாற்றிவந்த  தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.கே.  ராஜா என்ற அதிகாரியை கண்டுபிடித்தார் பிடிஆர்.

இந்த ராஜா  நாடாளுமன்றத்தில் பொது கணக்கு குழு, பெண்கள் நல அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்குழு, நாடாளுமன்ற கணினிமயமாக்கல் பொறுப்பையும் கவனித்தவர்.  மேலும் 5 ஆண்டுகள் மத்திய அரசின் வெளியுறவுத்துறையில் மாநிலங்கள் பிரிவில் (states division ) பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்த முயற்சியின் விளைவாக  ராஜாவை  தமிழக சட்டமன்ற செயலகத்துக்கு சிறப்பு அந்தஸ்தில் தமிழக பணிக்கு அழைத்து வந்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.  2021 நவம்பர் 16 ஆம் தேதி அவர் இந்த பதவிக்காக தமிழக சட்டமன்ற செயலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

ptr mkstalin assembly Secretariat

ஒரு வாரம் கழித்துதான்   இது தொடர்பான  பணியில் சேரும் ஆணை  2021  நவம்பர் 23 ஆம் தேதி  சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் மூலம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நிதித்துறையின் மூன்று குழுக்கள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் சிறப்பு அதிகாரியான ராஜாவின் பார்வைக்குப் பிறகே நிதித்துறை செயலாளருக்கு அனுப்பப்படும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அரசாணை நிர்வாக நடைமுறைப்படி சபாநாயருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, இந்த அதிகாரி நியமனம் பற்றி  நிதியமைச்சரும்,  சபாநாயகரும் ஏற்கனவே  ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்கள். 2021  நவம்பர் 23 ஆம் தேதி முறைப்படி பணியில் சேர்க்கப்பட்ட இந்த அதிகாரி ராஜாவுக்கான சம்பளம் உள்ளிட்ட பலன்கள் விவரங்கள் உள்ளிட்ட  முழுமையான அரசாணை 7 மாதங்கள் கழித்து அதாவது 2022 மே 2 ஆம் தேதிதான்  வெளியிடப்பட்டிருக்கிறது.

ptr mkstalin assembly Secretariat

மக்களவையில் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்த எம்.எல்.கே. ராஜாவுக்கு தமிழக சட்டமன்ற  செயலகத்தில்  ஆஃபீசர் ஆன் ஸ்பெஷல் டூட்டி என்ற  பெயர் அரசாணை மூலம் அளிக்கப்பட்டது. அதாவது தமிழக அரசின் துறைச் செயலாளருக்கு உரிய அந்தஸ்து  சம்பளம், சலுகைகளும் இந்த அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

சம்பளம் உள்ளிட்ட அம்சங்களுடன்  ஏழு மாதம் கழித்து அரசாணை வெளியிடப்பட்டாலும் அதிகாரி ராஜாவுக்கு அதற்கான பலன்கள் 2022 ஜூலை முதல்தான் கிடைத்திருக்கின்றன. 2021 நவம்பரில் இருந்து கொடுக்க வேண்டிய மொத்த சம்பளத்தையும் 2022 ஜூலையில்தான் கொடுத்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல.., மக்களவை செயலகத்தில் பணியாற்றிய  மூத்த அதிகாரியை அழைத்து வந்து செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறைக்கு எதிரே இருக்கிற, எம்.எல்.ஏ.க்களுக்கு டிராவல் அலவுன்ஸ் கொடுக்கும் சேம்பருக்குள் சுவர் ஓரமாக ஒரு டேபிள் சேர் போட்டு இதுதான் உங்கள் இடம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அங்கே வந்து உட்கார்ந்திருப்பது மதியத்துக்கு மேல் கிளம்பிப் போவது என்பதுதான் ராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட வேலையாக இருந்தது. அவர் எந்த பணிக்காக அழைத்து வரப்பட்டாரோ அந்த பணி அவருக்கு  சுமார் ஒன்பது மாதங்கள் ஆகியும் கொடுக்கப்படவே இல்லை. இந்த தகவல்கள் எல்லாம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் தெரியும்.

முதல்வரின் மூன்றாவது செயலாளரான சண்முகம் ஐ.ஏ.எஸ்,சிடம்தான் சட்டமன்ற விவகாரங்கள் இருக்கின்றது. அவரும் சட்டமன்ற சிறப்புச் செயலகத்தை உருவாக்கி ராஜாவை பணியில் அமர்த்த ஆர்வமாக இருந்தார்.

அவர் இது தொடர்பாக சிறப்பு அதிகாரி ராஜாவை வரவழைத்து சில முறை ஆலோசனையும் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் செயலாளர் சண்முகத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் சிறப்பு அதிகாரி ராஜாவின் டேபிளுக்கு கம்ப்யூட்டரும், இண்டர்காமும் ஒதுக்கப்பட்டது. இவ்வளவு ஆர்வம் செலுத்தியும் சண்முகத்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

ptr mkstalin assembly Secretariat

இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சபாநாயகர் அப்பாவுவும் சட்டமன்ற செயலாளர் சீனிவாசனும்தான் என்பதால் அவர்களிடம் பல முறை இது தொடர்பாக பேசியிருக்கிறார் பிடிஆர். ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

தமிழகத்தில் சட்டமன்ற சிறப்புச் செயலகத்தின் சிறப்பு அதிகாரியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி செய்யப் போகிறோம் என்ற ஆர்வத்தில் மக்களவை இயக்குனரகத்தில் இருந்து மாறுதல் கேட்டு தமிழகம் வந்தார் எம்.எல்.கே.ராஜா.

ஆனால் தமிழக அரசில் அப்படி ஒரு  பணியிடத்தை ஏற்படுத்தியதோடு வேறு எந்தத் துரும்பையும் கிள்ளிக் கூட போடாததால் இப்போது அவரால் மீண்டும் மத்திய அரசுப் பணிக்குக் கூட  போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் ராஜா இருந்த இடத்துக்கு அங்கே வேறு அதிகாரிகளை பணியமர்த்தியாகிவிட்டது. அதனால் மத்திய அரசு பணிக்கு திரும்பிச் செல்லவும் குறைந்தபட்சம் 3 மாதம் காத்திருக்க வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு பேசாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட டேபிள் சேரில் அமர்ந்துவிட்டு வீட்டுக்கு போகலாம்தான். ஆனால் இந்த  அர்த்தமற்ற நாட்கள் அதிகாரி ராஜாவை கடுமையான  மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்காக ஆர்வத்தோடு வந்தவரை தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தில்  நடக்கும் பனிப்போர்  கடுமையாக காயப்படுத்தியிருப்பதால், கடந்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்துவிட்டார் எம்.எல்.கே.ராஜா என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தினர். 

சிறப்பு அதிகாரி  ராஜா ராஜினாமா செய்யும் தகவல் முன் கூட்டியே நிதியமைச்சர் பிடிஆருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர்  ராஜாவை எதிர்கொள்வதில் மிக தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார்.  பெரிய அளவு ஆர்வத்தோடு முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட  கனவுத் திட்டம் கண்ணெதிரே  கலைந்துபோன  சோகத்தில் இருக்கிறார் பி.டி.ஆர்.  ஆனால் முதல்வரோ மினிட் டு மினிட் சிஎம் என்று தன்னை கூறி வருகிறார்”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப் .

எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு விழா : ரூ195 கோடி திட்டங்கள் தொடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share