கோவை PSG மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவி பவபூரணி மரண விவகாரத்தில் விரைவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி. இவர் கோவை PSG மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மயக்கவியல் துறையில் பயின்று வந்தார். கடந்த ஞாயிறன்று இரவு அவர் மர்மமான முறையில் கழிவறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல், மறுநாள் காலையில் தான் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தாமதம் மற்றும் மரணத்திற்கான தெளிவான காரணம் சொல்லப்படாததும், மாணவியின் மரணத்தைச் சுற்றி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
மேலும், பவபூரணியின் தந்தைக்கு கல்லூரி நிர்வாகத்தினர் முரணான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகிய அமைப்புகள் இணைந்து, பவபூரணி மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பவபூரணி மரணத்தில் உண்மைகளை வெளிக்கொணர உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நியாயமான, விரைவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
