சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மகாராஷ்டிராவில் வெடித்த மக்கள் போராட்டம்!

Published On:

| By christopher

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதேநேரத்தில், பொது மக்கள் பலர் பத்லாபூர் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.

பத்லாபூரில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் பத்லாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதேநேரத்தில், வேறு சிலர் பத்லாபூர் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஆகஸ்ட் 20) இந்தப் போராட்டம் நடந்தது.

மிகப் பெரிய எண்ணிக்கையில் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததை அடுத்து, அரசு உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடமை தவறிய பத்லாபூர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விசாரிக்கும் பணியில் தவறியதாகக் கூறி, மூன்று போலீஸ் அதிகாரிகளை மகாராஷ்டிர அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், “பத்லாபூர் காவல் நிலையத்தில் கடமை தவறியதற்காக மூத்த காவல் ஆய்வாளர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தானே காவல் துறை ஆணையருக்கு ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பள்ளி நிர்வாகம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) தாமதமாக முன்வந்து இச்சம்பவத்துக்கு பொறுப்பான தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் ஒரு பெண் உதவியாளர் ஆகியோரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், நடந்த இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் பத்லாபூர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மகாராஷ்டிராவில் இது மக்கள் போராட்டமாக வெடிக்க தொடங்கியுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா எம்சிஆர் செருப்புகள்?

டாப் 10 நியூஸ் : ஜம்முவில் ராகுல் முதல் கொல்கத்தா போராட்டத்தில் கங்குலி வரை!

கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் மேஜிக் செய்யும் ஃபேஸ் பேக்… வீட்டிலேயே செய்யலாம்!

Sexual assault of minor in Maharashtra

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share