ADVERTISEMENT

பாளையங்கோட்டை சிறை நிரப்பும் போராட்டம் : 500 பேர் கைது!

Published On:

| By Kavi

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை பகுதியிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வரை, 20 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டம் இன்று (ஜூலை 9)  நடைபெற்றது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை சிறை வாசிகளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “ இந்த போராட்டம் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளை நோக்கியும் நடைபெறும்.

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்துள்ள ஆதிநாதன் ஆணையம் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தென் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் இடையே ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலின்படி சிலர் சிறை வாசிகளாக இருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் சாசன சட்டம் 161ஐ பயன்படுத்தி 20 வருடங்களுக்கு மேல் வாழும் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேற்கு வங்கத்தில் ராணுவ வீரர்களைச் சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகளுக்கு மேற்குவங்க அரசு விடுதலை வழங்கி உள்ளது. இதனை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இதன்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிமுன் அன்சாரி தலைமையில் மேலப்பாளையத்தில் இருந்து பாளையங்கோட்டை மத்தியச் சிறை நோக்கி சிறை நிரப்பும் போராட்டத்திற்காகப் பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது காவல்துறையினர் பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யும் போது போலீசாருடனான தள்ளுமுள்ளு காரணமாக தமிமுன் அன்சாரிக்கு முழங்காலில் அடிபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்டம் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  ஆட்சியே போனாலும்… ஆளுநருக்கு எதிரான 19 பக்க புகார்:  ஸ்டாலின்  பேச்சு, கடிதப் பின்னணி!

“ஆளுநர் ரவி நீக்கப்படுவதற்கு தகுதியானவர்” : மு.க.ஸ்டாலின்

protest to fill the Palayangottai jail

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share