பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரசார கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி விஸ்வநாதன் தலைமையில் நேற்று தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இன்று, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை பெரியமேட்டில் காங்கிரஸ் கவுன்சிலர் டில்லி பாபு தலைமையில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல மோடியின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து மே 17 இயக்கத்தினரும் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி கைதாகினர்.
