மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட முயன்ற 50 பேரை போலீசார் இன்று (மே 19) கைது செய்தனர்.
கடந்த மே 3-ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துல சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற மதுரை ஆதீனம் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இதனையடுத்து பாகிஸ்தான் பற்றி பேசியதால் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக மதுரை ஆதீனம் பேசி பரபரப்பை கிளப்பினார். protest against madurai aadheenam
இந்த விபத்து குறித்து விளக்கமளித்த கள்ளக்குறிச்சி காவல்துறை, “கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து” என்று தெரிவித்தது.

மேலும், விபத்துக்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், மதுரை ஆதீனம் பொது அமைதியை சீர்குலைத்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை ஆதீனத்தில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடப்போவதாக இன்று அறிவித்திருந்தனர்.
ஆனால், போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மதுரை ஆதினத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.
தொடர்ந்து தடையை மீறி ஆதீன மடத்தை முற்றுகையிடுவதற்காக போராட்டக்காரர்கள் கிளம்பியபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 50 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. protest against madurai aadheenam