நடிகர் விஜயின் 49வது பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் பிறந்தநாள் சிறப்பு போஸ்டர்கள், வீடியோக்கள் தயாரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல யூடியூப் நிறுவனம் ஒன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விழாவை எடுத்தது.
அதில் கலந்து கொண்ட மாஸ்டர் மற்றும் இந்தாண்டு வெளியாக உள்ள லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித், நடிகர் விஜய் குறித்து பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் குறித்து பேசினார்.

தயாரிப்பாளர்களின் நடிகர் விஜய்
அவர் பேசுகையில், “விஜய் ரசிகர்களுக்கும் இயக்குனருக்கும் மட்டும் அல்ல, தயாரிப்பாளருக்கும் பிடித்தமான நடிகர்.
சமீபத்தில் லியோ படத்தின் நா ரெடி பாடல் சென்னையில் படமாக்கப்பட்டது. அதற்காக 2000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை கொண்டு 8 நாட்கள் எடுக்க திட்டமிடப்பட்டது.
இதனையறிந்த விஜய், நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டரை தனியாக அழைத்து, ’சார், இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது கடினம். இதனை 6-7 நாட்களுக்கு முடிக்க வாய்ப்பிருந்தால் நன்றாக இருக்கும். இதனால் தயாரிப்பாளருக்கும் செலவு குறையும்’ என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு பின்பு இதுகுறித்து நான் அறிந்தபோது உண்மையில் விஜய் குறித்து ஆச்சரியப்பட்டேன். மேலும் அவர் கூறியபடியே நா ரெடி பாடல் 7 நாட்களுக்குள் படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் எனக்கு 1 கோடி மிச்சமானது.
மாஸ்டர் படத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடல் எப்படி உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதுபோல நா ரெடி பாடலும் வெளியான சில மணி நேரங்களில் உலகளவில் ட்ரெண்ட் ஆகும்.
மேலும் நா ரெடி பாடலில் விஜயின் லுக்கை பார்க்கும் போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த விண்டேஜ் விஜய்யை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்” என்றார்.

இயக்குனரின் வேலையில் குறுக்கீடு?
மேலும் அவர், “நடிகர் விஜய் அவரது ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு அறிவார். அவர் இயக்குனரின் வேலையிலும் ஒருபோதும் குறுக்கிட மாட்டார்.
அவரது வசதிக்காக ஒரு காட்சியில் சில மாற்றங்களைச் சொல்ல நினைத்தாலும், ’இல்லை, இயக்குனரின் வேலையில் தலையிடக் கூடாது. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய நான் தயார்’ என்று உறுதியாக என்னிடம் தெரிவித்து விட்டார்.

அந்த வீடியோவுக்கு விஜய் தான் காரணம்!
காஷ்மீர் படப்பிடிப்பின் போது, பொதுவாக, படக்குழுவினரில் சிலர் தாங்கள் தங்கியிருக்கும் அந்தந்த ஹோட்டல்களில் அவர்கள் விரும்பியதை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் நடிகர் விஜய் எப்பொழுதும் படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்கள் தயாரிக்கும் உணவையே சாப்பிடுவார். அதற்கு காரணமும் இருந்தது.
காஷ்மீரில் கடும் குளிர் என்பதால் அதிகாலை 3 மணிக்கே எழுந்து ஊழியர்கள் உணவு சமைக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். இதனைறிந்த விஜய் என்னிடம், இவர்களுக்காக ஏதாவது செய்ய விருப்பம் தெரிவித்தார்.
கடும் குளிரில் வேலை செய்யும் அவர்களின் கடின உழைப்பை சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினரும் அறிந்து கொள்ளும் வகையில், வீடியோ உருவாக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அவரது ஆலோசனையின் பேரிலேயே பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய அந்த வீடியோவை வெளியிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின்போது விஜய்?
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது எங்களை முதலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தவர் நடிகர் விஜய் தான். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று அக்கறையுடன் விசாரித்தார்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்டப்போது, அதற்கு அவர், “நிலநடுக்கத்தை நான் உணரவே இல்லை. நான் கீழே இறங்கியபோதுதான் அது எனக்கு தெரியவந்தது. நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சாதித்த மாணவர்களிடம் அன்பு பரிசு கேட்ட நடிகர் விஜய்
