வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வெற்றிபெற்றுள்ளார்.
இன்று காலை முதல் ஒரு பக்கம் நாடே மகாராஷ்டிரா தேர்தலை உற்று நோக்கிக் கொண்டு இருந்தாலும், மறு பக்கம் வயநாடு மக்களவை இடைத்தேர்தலையும் கவனித்துக்கொண்டு இருந்தது.
ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அதுவும் மக்களவை தொகுதியில். இவரை எதிர்த்து பாஜக சார்பாக நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோக்கெரி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வந்தார். அவருக்கும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோக்கெரிக்கும் இடையில் போட்டி நிலவியது.
இந்நிலையில் தான் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,22,338.
இதன் மூலம் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ராகுல் காந்தியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றுள்ளார். ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் 3.65 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால தொடரில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தற்போது வெற்றிபெற்றுள்ள பிரியங்கா காந்தி பங்கேற்கவுள்ளார்கள்.
இதற்கிடையில் பிரியங்கா காந்தி இந்த வெற்றியை குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
“வயநாட்டின் அன்பான சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து நான் திக்குமுக்காடிவிட்டேன். காலப்போக்கில், இந்த வெற்றி உங்களது வெற்றியாக உணரவைப்பேன் என்பதையும், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களது குரலாக ஒலிக்க காத்திருக்கிறேன்!

இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கும் நன்றி.
UDF இல் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த எனது அலுவலக சகாக்கள், உங்கள் ஆதரவிற்கு நன்றி.
என் அம்மா, எனது கணவர் ராபர்ட் மற்றும் எனது இரண்டு குழந்தைகள்- ரைஹான் மற்றும் மிராயா ஆகியோருக்கு, நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் எந்த நன்றியும் ஈடாகாது. என் சகோதரர் ராகுல், நீங்கள் அனைவரையும் விட துணிச்சலானவர்… எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் எனக்கு துணையாக இருப்பதற்கும் நன்றி!” என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி வெற்றிபெற்ற பின் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் வாழ்த்து பெற்றார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!
