குழந்தையை பற்றி நெகிழ்ந்த பிரியங்கா சோப்ரா- நிக்ஸ்

Published On:

| By admin

முதல்முறையாக தங்களது குழந்தையை பற்றி நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரும் மனம் திறந்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பீகார் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட பிரியங்கா 2018ம் ஆண்டு அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், நடிகருமான நிக் ஜோன்ஸ்ஸை திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்காவை விட நிக் பத்து வயது இளையவர் என்பதால் இவர்கள் திருமணம் குறித்த சலசலப்பு ஆரம்பத்தில் இருந்தது. வயது வித்தியாசம் காரணமாக இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இருவரும் அதற்கு பதிலடி தரும் விதமாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் பல பதிவுகளை பகிர்ந்து இந்த வயது வித்தியாச சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள இருப்பதாகவும் தங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த தம்பதி தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது.

இதனை தொடர்ந்து இப்போது அன்னையர் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக ப்ரியங்கா- நிக்ஸ் தம்பதி தங்களது குழந்தையுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை நேற்று இரவு பகிர்ந்துள்ளனர்.

அதில், ‘இந்த அன்னையர் தினத்தில் நாங்கள் சொல்வது இதுதான். கடைசி மூன்று மாதம் எங்களுக்கு ரோலர் கோஸ்டரில் பயணம் போல தான் அமைந்தது. இதனை பலரும் அனுபவித்து இருப்பீர்கள். நூறு நாட்களை கடந்த பிறகு NICU-ல் இருந்த இந்த சிறிய பெண் குழந்தை வீட்டிற்கு வந்தடைந்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம், அதற்கு உண்மையான நம்பிக்கையும் அன்பும் தேவைப்படுகிறது. நிச்சயமாக கடந்த சில மாதங்கள் எங்களுக்கு சவாலானதாக இருந்தது.

ஆனால், அதை எல்லாம் மதிப்பு மிக்க தருணங்களாக இந்த சிறிய குழந்தை மாற்றி கொடுத்திருக்கிறாள். இவள் எங்களை வந்தடைந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இதற்காக லாஸ் ஏஞ்சலில் சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி.

எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது. அம்மாவும் அப்பாவும் ஆகிய நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.

என் வாழ்வின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

அதுமட்டுமில்லாமல், நிக் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. அம்மாவாக என்னை உணர வைத்ததற்கு நன்றி! Love you!!’ என நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நிக்கும் பிரியங்காவுக்கு தன்னுடைய முதல் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா.**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share