மராட்டியத்தில் பரோலில் வெளியேவிட்டாலும், 26 கைதிகள் ஜெயிலை விட்டு வெளியே செல்ல மறுத்து வருகின்றனா்.
மராட்டியத்தில் உள்ள ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலைக் குறைக்க அரசு முடிவு செய்து, தகுதி உள்ள கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் அரசு விட்டாலும், நாங்கள் ஜெயிலை விட்டு நகர மாட்டோம் என சில கைதிகள் அடம்பிடித்து வருவது தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 26 கைதிகள் பரோலில் செல்ல வாய்ப்பு இருந்தும், ஜெயிலிலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஒடிசாவைச் சேர்ந்த கைதி ஒருவர், ‘வெளியே போனால் குடும்பத்துக்கு பாரமாக இருந்துவிடுவோம். கொரோனா காலத்தில் எங்களுக்கு வேலை எங்கும் கிடைக்காது’ என நினைத்து வீடு திரும்ப மறுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
இதேபோல வேறு சில கைதிகளும் வெளியே சென்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோம் என பயந்தும், தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என சிலரும் பரோலில் செல்லாமல் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் கைதிகளுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் வழங்குகிறோம். கைதிகளுக்கு என தனியாக கொரோனா சிகிச்சை மையம் வைத்துள்ளோம். எனவே, தொற்று காலத்தில் ஜெயிலில் இருப்பது பாதுகாப்பானது என கைதிகள் நினைக்கின்றனர்” என்கிறார்.
**-ராஜ்**
.
