குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் காசிக்குச் சென்றது முதல் அசைவ உணவு உண்பதில்லை என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை (டிசம்பர்.1) தொடங்கியது. குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், சபை தலைவராக இருந்து முதல் முறையாக மாநிலங்களவையை வழிநடத்துவதால் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் சிபி.ராதா கிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசினார். அப்போது, “இன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம். இன்று மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கும் குடியரசு துணை தலைவருக்கு அவை உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிய பின்னணி
எங்கள் தலைவர் எளிய பின்னணியில் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்தவர். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே உங்கள் இளமைக் காலம் முதல் தற்போது வரை சமூகத்திற்கு சேவையாற்றுவது உங்கள் முக்கிய பணியாக இருந்து வருகிறது. உங்கள் ஆளுமை என்பது சேவை அர்ப்பணிப்பு பொறுமை ஆகியவற்றை எதிரொலிப்பதாக உள்ளது.
அசைவம் தவிர்த்த CPR
காசிக்குச் சென்றது முதல் அசைவ உணவு உண்பதில்லை என்ற முடிவை சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துள்ளார். காசியின் எம்.பி என்ற முறையில் அவரது முடிவை மனதார வரவேற்கிறேன். அதேசமயம் அசைவ உணவு என்பது தவறு என்று நான் கூறவில்லை” என்றார்.
கோவை குண்டு வெடிப்பு
மேலும் பேசிய மோடி, “கோவையில் 1998 இல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மயிரிழையில் உயிர் பிழைத்தீர்கள். அதையே வாய்ப்பாக கருதி நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டீர்கள். இது உங்கள் நேர்மறையான செயல்பாடுகளை காட்டுகிறது.
எளிய பின்புலத்தில் இருந்து குடியரசு துணைத் தலைவர் வரை பதவி உயர்வு பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் உயர்வு ஜனநாயகத்தை பலப்படுத்துவதை எடுத்துரைக்கிறது. நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன்” என தெரிவித்தார்.
