ஜெகந்நாதர் கோவில் சர்ச்சை: தமிழர்களை அவமதிக்கும் மோடி… ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By indhu

"Prime Minister Modi insults Tamil Nadu" - Stalin condemned

தமிழர்களை அவமதிக்கும் விதமாக பிரதமர் மோடி நடந்துகொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 21) தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 5 கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், 6, 7 கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் அங்குல் நகரில் பாஜகவிற்கு ஆதரவாக நேற்று (மே 20) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒடிசாவில் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இங்கு வளங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால், மக்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நமது வீட்டில் ஏதாவது பிரச்சனை, நம் வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் சாவியே கடந்த 6 ஆண்டுகளாக காணவில்லை. கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என விமர்சித்தார்.

முன்னதாக, மதுரையை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் தற்போது ஒடிசாவின் முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் தனி ஆலோசகராக உள்ளார். அவரை பிரதமர் மோடி மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை-கோட்பாடுகள்-செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரதமர் மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டிற்கு நல்லதல்ல.

"Prime Minister Modi insults Tamil Nadu" - Stalin condemned

முன்னதாக, உத்தரப்பிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழக மக்கள் மீது அபாண்டமாக பழியை சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன்.

சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும், தமிழக மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ளவில்லை.

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.

இது கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும், நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும், புண்படுத்துவதும் ஆகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? கோவிலின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?

தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும், வெறுப்பும் ஏன்?

தமிழகத்திற்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. வாக்கிற்காக தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“சிஎஸ்கே அணியின் முதல் கேப்டன் நான் தான்… ஆனால்”- சுவாரஸ்யம் சொன்ன சேவாக்

மதுபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… இருவர் பலி… கட்டுரை எழுத சொன்ன நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share