தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை வாங்க முடியாமல் மார்கெட்டுகளில் சாமானிய மக்கள் கடந்து செல்வதை காண முடிகிறது.
பருவ நிலை காரணமாக பிற மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம் என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. ஜூன் இறுதி வாரத்தில் ரூ.100ஐ எட்டிய தக்காளி விலை அதன் பிறகு ரூ.80, ரூ.60 என குறைந்தது.
இந்நிலையில் தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையை பொறுத்தவரையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதனால் மார்கெட்டுகளில் வியாபாரிகளிடம் விலையை கேட்டவாறு சாமானிய மக்கள் தக்காளியை வாங்காமல் கடந்து செல்கின்றனர்.
இவ்வாறு காய்கறிகளை வாங்க முடியாமல் நடுத்தர குடும்பத்தினர் கடும் சிரமத்தைச் சந்தித்து வரும் வேளையில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை தக்காளி விலை தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். கோயம்பேட்டில் இஞ்சி, காலிஃபிளவர் ஆகிய காய்கறிகள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
