கொரோனா: தப்பிக்க பத்து டிப்ஸ்!

Published On:

| By Balaji

ஒரு சிறிய வைரஸ்; ஆம், மிகச்சிறியது. தலை முடியின் தடிமனைவிட தொள்ளாயிரம் மடங்கு சிறியது இந்த கொரோனா வைரஸ். ஆனால் ஒருவரிடமிருந்து ஒருவருக்குத் தாவி, உலகையே பயமுறுத்தி வருகிறது. இதுவரை 81 நாடுகளில்(பிரதேசங்கள் உட்பட) அதிகாரப்பூர்வமாக பரவியிருக்கிறது கொரோனா. இதுவரை பார்க்காத புதிய வைரஸ் என்பதால், இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறைகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இல்லை என்று ஆயாசப்படுவதற்கு முன்பாக 28 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மருந்து இன்னும் கண்டிபிடிக்கப்படாமல் இருந்தாலும் நோய் பரவுவது எவ்வாறு? நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? எனும் வழிமுறைகள் இணையம் முழுவதும் உலா வருகின்றன. இதுகுறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ள புதிய அதிகாரப்பூர்வ தகவல்களின் தொகுப்பு இதோ.

ADVERTISEMENT

**நோயுள்ள ஒருவரின் அருகில் சென்றாலே ஆரோக்கியமான ஒருவருக்கு பரவுமா?**

கொரோனா பரவல் என்பது நோயுற்ற நபரின் எவ்வளவு அருகில் இருக்கிறோம், எவ்வளவு நேரம் நிற்கிறோம், நோயுற்றவரிடமிருந்து நீர்த் திவலைகள் நம்மிடம் பரவியதா, நீங்கள் உங்கள் முகத்தை தொடுகிறீர்களா. மேலும் உங்களுடைய வயது, நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் பலவற்றை பொறுத்துதான் நோய் பரவலை நிர்ணயிக்க முடியும்.

ADVERTISEMENT

**திவலைகள் என்றால் என்ன?**

நோயாளிகள் பேசும்போது, பாடும்போது, சிரிக்கும்போது அல்லது இருமும்போதோ எச்சில் அல்லது சளியுடன் வெளியேறும் வைரஸ் கிருமிகள் அடங்கிய துளிகளையே கிருமி நீர்த் திவலைகள் என்று அழைக்கிறோம். பொதுவாக வைரஸ் ஒரு செல்லை தாக்கி, அதை அழித்து பிறகு அடுத்த செல்லைத் தாக்கும்.

ADVERTISEMENT

அவ்வாறு வெளியேறும் திவலைகள் வழியில் எதையும் தாக்கவில்லையென்றால் நேராக தரையில் படிந்துவிடும். நோயற்ற ஒருவரை இந்த வைரஸ் திவலைகள் தாக்க வேண்டுமெனில் அவர்களின் கண், மூக்கு, வாய் இவற்றில் ஏதாவது ஒன்றின் வழியாக தாக்கவேண்டும். தோலின் மீது படுவதால் நோய்கிருமிகள் ஒருவரை தாக்காது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். அவர்களின் கருத்துபடி இருமல் மற்றும் தும்மலின் போதுதான் நோய் அதிகமாக பரவுவதாகக் கூறுகிறார்கள்.

**நோயாளிகளிடமிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்பது பாதுகாப்பானது?**

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி குறைந்தபட்சம் 3 அடி தூரம் நோயாளிகளிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும். நோய் தடுப்பு மையங்களின் அறிவுறுத்தலில் 6 அடி தூரம் பாதுகாப்பானது என்கிறது. ஆனால் உறுதியாக எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

**நோயின் அறிகுறிகள் என்னென்ன?**

காய்ச்சல், இருமல் மற்றும் சளியினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் திடீரென அதிகமானால் கண்டிப்பான மருத்துவ பரிசோதனையும் மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தலும் அவசியம்.

**நோயுற்ற நபரை சாதாரண கண்களால் பார்த்து கண்டுபிடிக்க முடியுமா?**

வாய்ப்பே இல்லை. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்திற்கான அறிகுறிகள் தான். எனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை தனியே கண்டுபிடிப்பது இயலாத காரியம். மேலும் கொரோனாவின் பாதிப்பை உணர்வதற்கு குறைந்தது 2 வார காலங்கள் ஆகும். அதுவரை வைரஸ் மற்றவர்களுக்கு பரவிக் கொண்டுதான் இருக்கும்.

**வைரஸ் இருக்கும் பகுதியினை தொடுவதன் மூலம் வைரஸ் பரவுமா? **

பேருந்தின் கைப்பிடியில் வைரஸ் இருந்து, அதை நோய் இல்லாதவர்கள் தொட்டால் அதன் மூலமாக வைரஸ் பரவாது. ஆனால் கைகளை கழுவாமல் மீண்டும் தங்கள் கண்களையோ, மூக்கையோ, வாயையோ தொடும்போது வைரஸ் கண்டிப்பாக பரவும். ஹாங்காங்கில் ஒரு புத்த கோவிலுக்குச் சென்று வந்த பலருக்கு, கொரோனா வைரஸ் பரவியதே இதற்கு சான்று. கதவின் தாழ்ப்பாள், குழாயின் மூடி, நாற்காலியின் கைப்பிடி ஆகியவற்றைத் தொடும்போது அவற்றில் வைரஸ் இருந்தால் அவை தமது கைகளில் ஒட்டிக்கொள்ளும். நமது கையை பிறகு முகத்திற்கு அருகே கொண்டு செல்லும்போது நம்மை வைரஸ் தாக்குகிறது. இதுபோல கொரோனா வைரஸ் படிந்த பிளாஸ்டிக், இரும்பு, கண்ணாடி போன்றவறில் படிந்த வைரஸை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது 9 நாட்கள் வரை வைரஸ் உயிருடனேயே இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது. மேலும் பரவுவதற்கு முன் இந்த வைரஸை அழிப்பது மிகவும் எளிது. கிருமிநாசினி கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தை துடைக்கும்போது வைரஸின் மேலுறை உடைந்து விடும். பிறகு கைகளை கழுவி விட்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இந்த வகை சோப் அல்லது கிருமி நாசினிதான் உபயோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

**பக்கத்து வீட்டினர் நோயுற்றால்?**

கொரோனா சுவற்றையோ அல்லது கண்ணாடிகளையோ தாண்டி பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் இருமிய இடங்களின் அருகில் இருக்கும் பகுதிகளை தொடுவதன் மூலமாக வேண்டுமானல் கொரோனா பரவலாம்.

**பாதிக்கப்பட்டவருக்கான சிகிச்சைகள் என்ன?**

உடலின் நீர்ச்சத்தினை அதிகரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் சக்தியை உடல் பெறுகிறது. எனவே இளநீர், ஓ.ஆர்.எஸ்(Oral Rehyderation Salt) கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைப் பருகுவதன் மூலம் கொரோனாவின் பாதிப்பைக் குறைக்கலாம்.

**ஒருவருடன் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருப்பதால் நோய் பரவுமா?**

முத்தம் கொடுப்பதன் மூலமாக கண்டிப்பாக நோய் பரவும். உடலுறவு கொள்வதன் மூலமாக பரவுமா என்பது இதுவரை கண்டறிப்படவில்லை.

**-பவித்ரா குமரேசன்.**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share