ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மீது 14 கேள்விகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கோரியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது; மேலும் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் 146-ன் கீழ் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாநில அரசுகள் வரவேற்றன.
ஆனால் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவும் தற்போது கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் வழக்கின் தீர்ப்பு குறித்து மொத்தம் 14 கேள்விகளை எழுப்பி உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். அதில்,
அரசியல் சாசனத்திலேயே இல்லாத நிலையில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு எப்படி காலக்கெடு நிர்ணயிக்க முடியும்?
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 146 ஐ மாநில அரசுகள், ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு பயன்படுத்த முயற்சிக்காதா?
என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பிஆர் கவாய்க்கு இது முதல் சவாலாகும். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றன உச்சநீதிமன்ற வட்டாரங்கள்.
