பொதுக்குழு… கிராமத்தை செலக்ட் செய்தது ஏன்? – பிரேமலதா சொன்ன காரணம்!

Published On:

| By Selvam

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வெளிச்சந்தை பகுதியில் உள்ள கே.வி.மஹாலில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 30) நடைபெற்றது. premalatha says dmdk state

தேமுதிகவின் அவைத்தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது,

“விஜயகாந்த் இல்லாமல் நடக்கின்ற முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இதுவாகும். ஆனால், விஜயகாந்த் நம்மை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

தருமபுரியில் உள்ள ஒரு கிராமத்தில் கே.வி.மஹாலில் நாம் கூட்டம் நடத்தியுள்ளோம். அதற்கு காரணம், விஜயகாந்தை பொறுத்தவரை அவர் ஏ சென்டர் ஹீரோ இல்லை, பி மற்றும் சி சென்டர் ஹீரோ.

அவர் கிராமங்களையும் கிராம மக்களையும் விரும்பக்கூடியவர். நானும் ஒரு கிராமத்து விவசாய குடும்பத்தில் இருந்து வந்து தான் இன்றைக்கு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதனால், ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த பொதுக்குழுவை சமர்ப்பிக்கிறேன்.

ஏனென்றால், எப்போது கிராமங்கள் முன்னேறுகிறதோ, அப்போது தான் தமிழ்நாடு முன்னேறும் என்பதில் உறுதியாக இருந்தவர் விஜயகாந்த். தருமபுரியில் பொதுக்குழு நடத்தப்படும் என்று கேப்டன் கொடுத்த வாக்கு நடந்திருக்கிறது. தமிழகத்தில் இத்தனை மாவட்டங்கள் இருந்தும், தன்னுடைய படத்தில் தருமபுரி என்று கேப்டன் நடித்தார்.

நிச்சயமாக தேமுதிக வீறுநடைபோட்டு வெற்றி பெறுவோம். ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. விஜயகாந்திற்கு முதல் வெற்றியை கொடுத்தது தேமுதிக மாநாடு தான்.

சமீபகாலமாக நாம் எந்த மாநாடும் நடத்தவில்லை. உங்களுக்கு செலவு வைக்ககூடாது என்பதற்காக தான் மாநாடு நடத்தவில்லை. ஆனால், நீங்களே எப்போது மாநாடு நடத்தப்படும் என்று கேட்டதால் தான் மாநாடு பற்றி அறிவித்துள்ளேன்.

நம்மை போல யாரும் மாநாடு இதுவரை நடத்தவில்லை. ஏனென்றால், மற்றவர்கள் சோறும், பீரும் கொடுத்து அழைத்து வருவார்கள். ஆனால், இது உண்மைக் கூட்டம்” என்று பிரேமலதா தெரிவித்தார். premalatha says dmdk state

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share