‘ஆபத்தில் ஜனநாயகம்.. பத்திரிகையாளர்களைச் சந்திப்பாரா பிரதமர்?’ – நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி!

Published On:

| By Minnambalam Desk

prakashraj questioned pm modi on rahul allegations

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு குறித்த வீடியோவை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் நேற்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவ்புரா சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் நடத்திய ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 11,965 வாக்காளர்கள் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. மேலும் 40,009 வாக்காளர்களின் முகவரி போலியாக உள்ளது என்றும் 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் 4,132 பொருத்தம் இல்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று பகீர் தகவலை வெளியிட்டார்.

கர்நாடகாவில் பெங்களூரு மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு தொகுதியிலும் நடந்திருந்தால் நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ADVERTISEMENT

நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை திருடியது யார் என்பது உங்களுக்கு தெரியும். இதற்கு முன் எங்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் இப்போது எங்களிடம் 100% ஆதாரம் உள்ளது. அதற்கான தரவுகள் அனைத்தும் கிடைத்துள்ளது என்றார். இதுபோல் அதிர்ச்சி தரும் பல பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது செய்தியாளர் சந்திப்பு நடந்த சில மணி நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு, #Vote chori போன்ற தலைப்புகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு குறித்த வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் “ஒவ்வொரு தேச பக்தரான இந்தியரும் இதை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்றச் செயல். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன் வைத்துள்ளார். முதன்முறை என்ற போதிலும் இம்முறை பிரதமர் ஆகிய நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிப்பீர்களா? நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது”என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share