ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவுத் தொடங்கியது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள்,
கொரோனோ பாதிப்பு இருப்பதாக சந்தேகிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது..
இதன்படி, இந்த தொகுதியில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்களிக்க தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் விருப்பமுள்ளவர்களிடம் படிவங்கள் வழங்கப்பட்டன. இதுபோன்று படிவம் பெற்ற நபர்களிடம் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பெரும் பணி இன்று (பிப்ரவரி 16) தொடங்கி இருக்கிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 321 பேரும் மாற்றுத்திறனாளிகள் 31 பேரும் உள்ளனர். இந்த 352 பேர் தபால் வாக்குகளை செலுத்த படிவம் 12-D பெற்றுள்ளனர்.
தபால் வாக்குகளை பெறுவதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆறு குழுக்களும் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளை பெறுகின்றனர்.
இவர்களுடன் வேட்பாளர்களின் முகவர்களும் செல்கின்றனர். இவை அனைத்தும் முழுமையாக தேர்தல் ஆணையத்தால் வீடியோ ஒளிப்பதிவும் செய்யப்படுகிறது.
இன்றும் நாளையும் ஆறு குழுக்களும் 352 பேரிடம் வாக்குகளை பெறுகின்றனர். இரண்டு நாட்களில் பெற முடியாதவர்களுக்கு இருபதாம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பாக தபால் வாக்குகள் பெறப்பட இருக்கின்றன.
தபால் வாக்களிக்கும் 352 பேரும் 27ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா