22-வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் நேற்று (ஆகஸ்டு 6) நடந்த பிளே ஆஃப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா கெக்லாட் ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ்டைனை 12-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் பூஜாவுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூஜா, “தங்கப் பதக்கம் வாங்காததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். இங்கு, நமது நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நான் விரும்பினேன். என்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் உழைப்பேன்” என்று உடைந்த குரலில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பூஜா, உங்களது விருது மன்னிப்பிற்கானது அல்ல, கொண்டாட்டமான ஒன்று. உங்களுடைய வாழ்க்கை பயணம் எங்களுக்கு உந்துதலாகவும், எங்களை மகிழ்விப்பதாகவும் உள்ளது. எதிர்காலத்தில், உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும். ஜொலித்துக்கொண்டே இருங்கள்” என்று பூஜாவை உற்சாகப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
–செல்வம்
காமன்வெல்த்: இந்தியாவிற்கு அடுத்த தங்கம், வெண்கல பதக்கங்கள்!