”பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்”: அமீருக்கு ஆதரவாக பொன்வண்ணன்

Published On:

| By Monisha

gananavel raja ameer issue

தமிழ் சினிமாவில் இன்றைக்கு பிரதான விவாதமாக மாறியுள்ள ’பருத்திவீரன்’ படத்தின் தயாரிப்பாளர் கே.ஏ.ஞானவேல்ராஜா – படத்தை இயக்கிய அமீர் இருவருக்கும் இடையிலான மோதல் சம்பந்தமாக அப்படத்தில் நடித்தவர்கள், பஞ்சாயத்தில் பங்குகொண்டவர்கள் மெளனமாக இருப்பது நியாயமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார். gananavel raja ameer issue

அதன் பிறகு அப்படத்திற்கு நிதியுதவி செய்த சசிக்குமார், படத்தில் பணியாற்றிய இயக்குநர் சமுத்திரக்கனி இருவரும் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நிலையில், பருத்திவீரன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணன் தனது கருத்தையும், விமர்சனத்தையும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், ”பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேலின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

ADVERTISEMENT

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன். பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது.

ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானபடுத்திவிட்டு, டப்பிங்,  எடிட்டிங், ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

ADVERTISEMENT

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது ’படைப்பிற்கு’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’ அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும், திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, திருடன், வேலைதெரியாதவர் என அந்த ஊடக பேட்டி முழுக்க வக்கிரமாக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை  அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ. வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை. இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.

பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

Bigg Boss 7 Day 56: “என்ன உங்க டீம்ல சேர்க்காதீங்க”… பூர்ணிமாவை ரோஸ்ட் செய்த கமல்ஹாசன்

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இணைந்த மெட்ராஸ் சாப்பர்ஸ்!

gananavel raja ameer issue

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share