’பொன்னியின் செல்வன்’ படம் குறித்து பலரும் பேசிவரும் நிலையில், நடிகை மீனாவும் அவருடைய விருப்பமான கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் நாளை (செப்டம்பர் 30) வெளியாக இருக்கிறது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
தற்போது எல்லோரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பற்றியே பேசி வரும் நிலையில், நடிகை மீனாவும் அப்படம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிந்துள்ளார்.
அதில், ”இதற்கு மேலும் என்னால் ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்குப் பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன்.
அது, ஐஸ்வர்யா ராய். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் என்னுடைய கனவு கதாபாத்திரமான நந்தினியாக அவர் நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என அதில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ’நந்தினி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நந்தினி கதாபாத்திரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர், ”இந்த நாவலுக்கு ’பொன்னியின் செல்வி’ என்றுகூடப் பெயரிட்டிருக்கலாம்” என்று சொன்னார்.
ரஜினி மட்டுமல்ல, இன்னும் பலரும் நந்தினியின் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுப் பேசுவதற்குக் காரணம், நந்தினிக்கு இணையாக அழகில் நாவலில் வேறு யாரையும் ஒப்பிட்டிருக்க மாட்டார் கல்கி.
அவருடைய தலைசிறந்த கற்பனை கதாபாத்திரம்தான் நந்தினி. அதனால்தான் அவருடைய கதாபாத்திரம் குறித்து பலரும் பேசுகிறார்கள். அந்த கதாபாத்திரத்தில் நடிகை மீனாவுக்கும் நடிக்க ஆசை இருந்ததையடுத்தே இத்தகைய பதிவைப் பகிர்ந்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
“முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்” : நந்தினி குறித்து சின்ன பழுவேட்டரையர்