அமரர்கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புனைவுடன் கூடிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார்.
இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ் சினிமாவில் அதிகபட்ச மொத்த வசூல் 500 கோடி ரூபாய் சாதனையை நிகழ்த்தி இருந்த விக்ரம் படத்தின் சாதனையைப் பொன்னியின் செல்வன் – 1 சமன் செய்தது.
லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால், உட்படப் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் இன்று (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு இல்லை. அதனால் படத்துக்கான விளம்பர பணிகளை லைகா நிறுவனம் தீவிரப்படுத்தியது.
தனிவிமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் பொன்னியின் செல்வன் – 2 படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்தநிலையில் இன்று வெளியாகும் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ படத்திற்கான முதல் காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
காரணம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க அரசு தரப்பில் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஏற்கனவே அண்மையில் வெளியான சிம்புவின் ‘பத்து தல’ தொடங்கி முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
காலை 9 மணிக்குத் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான முன்பதிவு இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள முன்னணி திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முதல்நாள் காட்சிக்கான 90% டிக்கட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
குறைந்த கட்டணத்தில் திரைக்கு நெருக்கமாக உள்ள இருக்கைக்கான டிக்கட்டுகள் விற்பனை ஆகவில்லை.
இதில் விதிவிலக்காக சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள பிரபலமான அண்ணா திரையரங்கில் 4 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
ஆனால், அந்த 4 காட்சிகளிலும் டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. அதே போன்று காசி, உதயம் திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாகவே காணப்படுகிறது.
தவிர, சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிலைதான் தமிழகத்தின் அனைத்து திரையரங்கங்களிலும் நிலவுகிறது.
வெள்ளிக்கிழமை தவிர்த்து சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்களும் அரசு விடுமுறை தினம். இந்த நாட்களில் டிக்கெட் தேவை, வாய்ப்புள்ள இடங்களில் ஐந்து காட்சிகள் திரையிடப்பட வேண்டும்,
அதேபோன்று குக்கிராமம் முதல் நகரம் வரை 120, 150,300 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் மூவீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமானுஜம்
CSKvsRR : 200வது போட்டியில் ராஜஸ்தான் அணி படைத்த சாதனை பட்டியல்… இதோ!
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: தமிழகத்தை பின்பற்றும் ராகுல்
