ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்: பொன்முடி

Published On:

| By Balaji

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கல்லூரிகளுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைனில் தான் நடத்தப்படும். அதுகுறித்து அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள அமைச்சர் பொன்முடி, “ஆப்லைனில் தான் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் இன்றைய சூழலில் அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள காரணத்தினாலும், ஒருவேளை ஆப்லைனில் நடத்தினால் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படலாம் என்பதாலும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஆனால் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கண்டிப்பாக ஆப்லைனில் தான் நடத்தப்படும்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் நிலவரத்தைப் பொறுத்து வகுப்புகள் ஆன்லைனில் நடத்துவதா அல்லது ஆப்லைனில் நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

ADVERTISEMENT

ஆன்லைனுக்கு தகுந்தாற் போல் வினாத் தாள் தயாரிக்கப்படும். கடந்த 90 நாட்களாக நடத்திய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வில் முறைகேடு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் கொரோனா தொற்று காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த நிலையில், நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைனில் நடத்தப்பட்டன. அப்போது ஆப்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்தச்சூழலில் இன்று ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share