அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
2001-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்தார். அப்போது அவரும் அவாது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்டோரும் அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் அக்டோபர் இறுதி வரை விசாரணை நடத்தப்பட்டது. 57 சாட்சிகளிடம் விசாரித்ததில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
அதுபோன்று, “செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மைதான். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண்ணை எடுக்கவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளது” என பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
இந்த பதிலை முதன்மை மாவட்ட நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரனை இன்று (மார்ச் 2) மீண்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தபோது இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததால் ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிப்பதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான இந்த வழக்கில் தீர்ப்பு வரவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
