பொன்முடிக்கு புதிய சிக்கல் : ED வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. Ponmudi ordered to appear in ED case

2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.

அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, மனைவி விசாலாட்சி உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையும் பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது.

2023 ஜூலையில் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது,

அப்போது, ‘செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

மேலும், முக்கிய ஆவணங்களும், ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டது.

இந்தநிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் பொன்முடி, திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை 2023 ஆகஸ்டில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

தொடர்ந்து கூடுதல் குற்றப்பத்திரிகையும், 26 கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மினரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றபத்திரிகையில் அமலாக்கதுறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த கூடுதல் குற்றபத்திரிகை இன்று (மார்ச் 5) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், பொன்முடி, கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். Ponmudi ordered to appear in ED case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share