திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும்,
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பு வகித்து வந்த பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஈஸ்வர சுவாமி திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியும் திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பெண்களை குறிப்பிட்டு சைவம், வைணவம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியதால் அவரது அமைச்சர் பதவியும் திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
இந்த சூழலில் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் கனிமொழி, ஐ பெரியசாமி, திருச்சி சிவா, ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ் என ஐந்து பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திமுகவில் துணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்பு 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நமது மின்னம்பலத்தில், “டிஜிட்டல் திண்ணை: மதுரையில் ஸ்டாலின்.. காத்திருக்கும் அழகிரி.. திமுகவில் அதிரடி மாற்றங்கள் அறிவிப்பு?” என்ற தலைப்பில் மே 31-ந் தேதி மதுரை திமுக பொதுக்குழு தொடர்பான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தோம்.
அதில், “திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என்ற படிநிலை இருக்கிறது. இதில் கவுண்டர்கள் ஒருவர் கூட இல்லையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டதாம்.
அத்துடன், பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா என முக்குலத்தோர் 3 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளோம். அதனால் கவுண்டர் ஒருவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் தலைமை நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாம்” என தெரிவித்திருந்தோம்.
தற்போது, நாம் குறிப்பிட்டிருந்ததைப் போல திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பொன்முடியைப் பொறுத்தவரையில் அமைச்சர் பதவி- துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும் திமுகவின் அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் கலந்து கொண்டதை முதல்வர் தொடர்ந்து கவனித்தும் வந்தார்.
இன்னொரு பக்கம், முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் போதெல்லாம், ‘நான் பேசுனது தப்புதான்.. எனக்கு எல்லாம் மன்னிப்பே இல்லைங்களா?’ என கேட்டுக் கொண்டிருந்தார் பொன்முடி.
அதாவது தமக்கு அமைச்சர் பதவியை மீண்டும் தர கோரி முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து வந்தார் பொன்முடி.
ஆனால், “நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது அமைச்சர் பதவியை மீண்டும் கொடுத்தால் சிக்கலாகிவிடும்.. நீதிமன்ற வழக்கு முடிந்த பின்னர் அதுபற்றி பார்க்கலாம்” என முதல்வர் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
தற்போது தேர்தல் நெருங்குவதால் பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
மேலும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகளை செம்மையாக செய்திடவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு வேலூர் வடக்கு வேலூர் தெற்கு ஆகிய இரு மாவட்ட கழகங்கள் பிரிக்கப்படுகிறது.
வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நந்தகுமாரும், காட்பாடி, கீழ்வை தியாணான்குப்பம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கதிர் ஆனந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
