சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வரும் நிலையில் பொன்முடி மனைவி விசாலாட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
1996- 2001 திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜூன் 28-ஆம் தேதி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும் வேலூர் நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து பொன்முடி மனைவி விசாலாட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் முழு விசாரணையும் முடிந்து நாங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் ஏன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்: கே.சி.கருப்பண்ணன்
