பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் அரிசி, கரும்பு, உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ரூ. 1000 பணம், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு.
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
அரிசி பச்சரிசி முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுத்தி விளம்பரம் செய்து நியாயவிலைக் கடைகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிறப்புப் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் நியாயவிலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும்.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை கொடுத்து முதலில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
கலை.ரா
அம்மா… பிரதமர் மோடியின் நினைவலைகள்!
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷுக்கு ஆசி தந்த தில்லாலங்கடி சாமியார்!
