பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று ஜனவரி 4-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி, குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகப் போற்றிக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாளாகும்.

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக
- ஒரு கிலோ பச்சரிசி
- ஒரு கிலோ சர்க்கரை
- ஒரு முழு நீளக் கரும்பு
வழங்க ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
