தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி,வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக 24,416 பதவிகளுக்காக 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அக்டோபர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டார்கள். இதில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி கண்டது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைவருமே, வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்புடன் தேர்தலுக்காக பல்வேறு செலவுகளை மேற்கொண்டனர்.
தற்போது, அந்த தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் தாக்கல் செய்ய வேண்டும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்ததற்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து, வேட்பாளர்கள் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 37(4)ன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,