�
தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் முன்பு இல்லாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. சில இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிகரமாகவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 24) ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில்,” அரசு தேவையற்ற திட்டங்களுக்கு செலவிடுவதற்கு பதிலாக அந்த தொகையை சுகாதாரத்துறைக்கு செலவிடலாம். மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டங்களுக்கும், செலவிடும் தொகையை நிறுத்திவிட்டு, அந்தத் தொகையை தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் செலவிடலாம். மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யலாம். இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் இன்னும் தீவிரமாகும்.இதை சமாளிக்க இந்த தேசம் தயாராக வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார்.
மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவிடப்படுவதை சுட்டிகாட்டி இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
**வினிதா**
.�,