தமிழகத்திலிருந்து ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் முருகனின் சுய விவரத்தில் எல். முருகன், கொங்குநாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.
ஒன்றிய அரசின் குறிப்பிலேயே கொங்குநாடு என்ற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது என்றால் இது தமிழ்நாட்டைப் பிரித்து கொங்குநாடு அமைக்கப்படும் என்ற பாஜகவின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறதா என்றும், ஒன்றிய அரசு என்று மத்திய அரசை தமிழக அரசு அழைக்கும் நிலையில் அதற்கான பதிலடியாக இந்த வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறதா என்றும் விவாதங்கள் எழுந்தன.
இதற்கிடையில் கொங்குநாடு தனி மாநிலம் வேண்டும் என்று கோவை மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக பாஜக சார்பில் இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் என்.ஏ.எஸ்.பிரசாத் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கொங்குநாடு என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு அல்ல” என்று கூறப்பட்டது. ஆனபோதும் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜகவின் பலர் கொங்குநாட்டை வலியுறுத்தியே வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனே நேற்று (ஜூலை 16) விளக்கம் அளித்துள்ளார். நேற்று தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கும் விழாவில் எல். முருகனும் கலந்துகொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கொங்குநாடு பற்றிய கேள்வி அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
“ இதுல எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு அமைச்சரையும் அறிமுகம் செய்யும்போது எல். முருகன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது கொங்குநாடு, தமிழ்நாடு என்று இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும், நாங்கள் எமோஷனல் பாலிடிக்ஸ் பண்ணி இதைப் பிரிக்கிறோம். அதைப் பிரிக்கிறோம்னு சொல்லி பாலிடிக்ஸ் பண்ணது கிடையாது.
முருகன் அவர்களுக்கு ஒரு சோஷியல் ஐடென்டிடியாக சமுதாய அடையாளமாக அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். இப்ப கூட ட்விட்டர் பேஜ்ல கொங்குநாடு, சோழ நாடு, பாண்டியநாடு எல்லாமே போட்டுக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்பது முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து மேலே அனுப்பப்பட்டுள்ள இணை அமைச்சர். இதில் வேறு எந்த குழப்பமும் கிடையாது” என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே… ”இதில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்விகள் தொடர ஒன்றிய அமைச்சர் முருகன் குறுக்கிட்டுப் பேசினார்.
“இது டிஸ்கஸ் பண்ண வேண்டிய பாயின்ட்டே கிடையாது. இட் ஈஸ் அன் அவர் க்ளரிக்கல் மிஸ்டேக்”என்று பதிலளித்து கொங்குநாடு என்று அழைத்தது தங்கள் தவறுதான் என்று முற்றுப்புள்ளி வைத்தார் முருகன். அப்போது சி.டி.ரவி பிரஸ்மீட்டிலேயே முருகன் பக்கமாக சாய்ந்து, ‘இதுவும் ஒரு அடையாளம்தானே.. நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?’ என்று கேட்டார்.
ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதற்காக கொங்குநாடு என்ற முழக்கம் முன் வைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதெல்லாம் இல்லைங்க. நமது அமைச்சரே இதை கிளாரிஃபை பண்ணிவிட்டார். அந்த சப்ஜெக்ட்டை விட்டுடுங்க’என்றார்.
“கட்சியில் மாவட்ட அமைப்புகளில் கொங்குநாடு வேண்டுமென்று தீர்மானம் போட்டிருக்கிறார்களே?” என்ற கேள்விக்கு,
“ஒரு மாவட்டத்தில் செயற்குழுவில் தீர்மானம் போட்டிருக்காங்க. எங்களுடைய சில தலைவர்களும் அங்க போயிருந்தாங்க. உடனடியாக அந்த மாவட்டத் தலைவரை நாம் கேட்டிருக்கிறோம்.’கீழே மக்கள் இதுபோல எதுவும் கேட்காதபோது, கட்சியின் கருத்தும் இப்படி இல்லாதபோது நீங்கள் எப்படி தீர்மானம் போடலாம் என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அவர் விளக்கம் அளிப்பார். தமிழக பாஜகவின் நிலைப்பாடு அது கிடையாது. ஒரு சின்ன விஷயத்தை வைத்து பெரிதுபடுத்தக் கூடாது” என்று முடித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
ஒரு வாரமாக வேறு பிற அடிப்படைப் பிரச்சினைகளை ஓரங்கட்டி கொங்குநாடு என்ற கோஷம் மீடியாக்களிடம் விவாதப்பொருள் ஆன நிலையில், அதை ஒரு கிளரிக்கல் மிஸ்டேக் என்று ஒரேடியாக முடித்துவிட்டார் முருகன்.
**-வேந்தன்**
�,