தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவர் இந்து கோயிலின் தேர் இழுக்கக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகவதி அம்மன் கோயிலிலும், குமாரகோவில் குமாரசாமி கோயிலிலும் இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கே கன்னியாகுமரி மாவட்ட அமைச்சரான மனோ தங்கராஜும், பக்கத்து மாவட்டமான தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பகவதி அம்மன் கோயில் தேரை வடம்பிடித்து தொடங்கிவைத்தனர்.
அதையடுத்து இரு அமைச்சர்களும் அருகே இருக்கும் குமாரகோவில் குமாரசாமி முருகன் கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக எட்டு மணிக்கு மேல் சென்றனர். போலீஸ் படையும் அமைச்சர்கள் கூடவே குமாரகோவிலுக்கு சென்றது.
அமைச்சர்கள் சென்றதும் தேரோட்டம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பாஜகவின் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பாஜகவினர், “அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கிறிஸ்துவர். அவர் இந்து மத கோவிலில் வந்து தேர் இழுக்கக் கூடாது” என்று தெரிவித்தனர். அவர்களுடன் அறநிலைய அதிகாரிகள் பேசியும் பாஜகவினர் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு அருகே இருக்கும் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதையடுத்து அமைச்சர்கள் மனோ தங்கராஜும், அனிதா ராதாகிருஷ்ணனும் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். தனக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புகெல்லாம் அஞ்ச மாட்டேன். இந்தியா ஜனநாயக நாடு என்பது அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிந்திருக்க வேண்டும். நான் இந்த மாநிலத்தின் அமைச்சர். அனைத்து மத தலங்களுக்கு செல்ல எனக்கு உரிமையும் தகுதியும் இருக்கிறது. அவர் (எம்.ஆர். காந்தி) என்னுடன் பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர். அவர் இந்த மண்ணை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்ல இருக்கிறார். அது நடக்காது.
நாகர்கோவிலில் 35 சதவிகிதம் கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை வாங்கி ஜெயித்தார். அவர் தேர்தலின்போது எத்தனை கிறிஸ்துவ வீடுகளுக்கு ஏறி இறங்கினார் என்று எனக்கு தெரியும். ஆனால் நாம் அதெல்லாம் பார்ப்பது கிடையாது. அனைத்து மத விழாக்களிலும் கலந்துகொள்வேன்” என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
-**வேந்தன்**