பிப்ரவரி 19, 2022 அன்று தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அரசியல் கட்சி வேட்பாளராக கட்சி சின்னத்தில் போட்டியிட்டாலும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, மக்கள் பிரச்சினைகளில்அவரது கடந்தகால செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே மக்கள் வாக்களிக்கின்றனர். இதில் அரசியல் கட்சி சின்னம் என்பது அறிமுகத்திற்கும், கூடுதல் பலத்திற்கு மட்டுமே பயன்படும் என்பது கடந்த கால உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தலைவராக இருக்கும், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “
தமிழ்நாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின்படி தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக, அனைத்து மாவட்டத் தலைவர்களும், அணித்தலைவர்களும், ஒன்றிய நகரப் பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும்,ரசிகர்களும் முழு மூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**இராமானுஜம்**