இந்தியைத் திணிக்க முடியாது: நாடாளுமன்றத்தில் வைகோ

Published On:

| By Balaji

ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 5ஆம் நாளான இன்று மதிமுக எம்.பி வைகோ பூஜ்ஜிய நேரத்தின் போது பேசினார்.

அப்போது அவர், “இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு உறுதி அளித்திருந்தார்.

ஆனால் அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்திதான் தேசிய மொழி. உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறியுள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன. இது ஒரு அடக்குமுறை ஆகும்.

இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. ஒன்றிய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, ஒன்றிய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை” என்று கூறினார்.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்த வைகோ, “அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கிறது.

எனவே, அரசமைப்புச் சட்டத்தில் உரியத் திருத்தங்களை மேற்கொண்டு, 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில், திமுக நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார். அதே உணர்வுதான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது” என்றார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share