oஇந்திய ஐக்கிய நாடுகள்: வைகோ வலியுறுத்தல்!

Published On:

| By Balaji

இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பான வழக்கு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் டெல்லியைச் சேர்ந்த நமஹா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. ஆனால் ‘இந்தியா’ எனும் பெயரை மாற்றி, ‘பாரத்’ என்று அழைக்கும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக அமையும். ‘பாரத்’ அல்லது ‘இந்துஸ்தான்’ பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது. எனவே, இந்தியா எனும் பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஜூன் 3, 2020 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரர் தனது மனுவின் நகலை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 13) கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்த மனுவை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்திருந்தாலும், மத்திய அரசின் தொடர்புள்ள அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும், மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. இதன் பின்னணிதான் பல ஐயப்பாடுகளை எழுப்புகிறது” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1(1)இன் படி பாரத் என்ற இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று பிரகடனம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடும் வைகோ, “இந்திய அரசியல் நிர்ணய சபையில், இந்துஸ்தான் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததும், மறைக்க முடியாத வரலாறு ஆகும். இந்நிலையில், இந்துத்துவ சனாதன ஆதிக்க சக்திகளின் பிடியில் நாடு சிக்கியிருக்கின்ற இந்த நேரத்தில், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதும், அதற்கு உச்சநீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “பேரறிஞர் அண்ணா சுட்டிக் காட்டியது போல, இந்தியா ஒரு நாடு அல்ல, இணைக்கப்பட்ட துணைக் கண்டம் என்பதை பாஜக ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு.

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில், ‘இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India)’ என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும். அதைவிடுத்து, இந்துத்துவ சனாதன சக்திகள் தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்” என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share