இந்தியா தற்போது இதுவரை எதிர்கொள்ளாத அவசர நிலையை எதிர்கொண்டு வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தற்போதைய கொரோனா பரவல் தொடர்பாகவும், தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாகவும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (ஏப்ரல் 18) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் கொரோனா தடுப்பூசி பற்றிய சில ஆலோசனைகளை அவர் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.
“உள்நாட்டு தடுப்பூசி குறைவாக இருப்பதால், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) அல்லது யு.எஸ். எஃப்.டி.ஏ போன்ற நம்பகமான நிறுவனங்களால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் சோதனைகளுக்கு வற்புறுத்தாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
வெவ்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் அளவுகளுக்கான உறுதியான ஆர்டர்கள் என்ன என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து தடுப்பூசி போட விரும்பினால், தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட விநியோக அட்டவணையை கடைப்பிடிக்கக்கூடிய வகையில் முன்கூட்டியே போதுமான ஆர்டர்களைக் கொடுக்க வேண்டும்.
வெளிப்படையான திட்டமிடல் அடிப்படையில் மாநிலங்களில் இந்த விநியோகம் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்ட வேண்டும். அவசர தேவைகளின் அடிப்படையில் விநியோகத்திற்காக மத்திய அரசு 10 சதவிகிதத் தடுப்பூசியை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது தவிர, அனைத்து தடுப்பூசிகளும் மாநில அரசுகள் கையாள்வதற்கான தெளிவான சமிக்ஞையை கொண்டிருக்க வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் திட்டங்களைத் திட்டமிட முடியும்.
தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதி மற்றும் பிற சலுகைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உற்பத்தி வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
கூடுதலாக, சட்டத்தில் கட்டாய உரிம விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். இதனால் பல நிறுவனங்கள் உரிமத்தின் கீழ் தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும். எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயைக் கையாள்வதற்கான மருந்துகளின் விஷயத்தில் இது முன்னர் நடந்தது என்பதை நான் நினைவுகூர்கிறேன். கொரோனாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஏற்கனவே கட்டாய உரிமம் வழங்கும் ஏற்பாட்டைப் பயன்படுத்தியுள்ளது என்பதை நான் படித்திருக்கிறேன்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
**-வேந்தன்**�,