டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்களை எரிக்க இடமில்லாமல் டெல்லி அரசு திணறி வருகிறது.
இந்தியாவில் பேயாட்டம் போட்டு கொண்டிருக்கிற கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் டெல்லியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தலைநகரின் நிலை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.
டெல்லி மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியின்மை, ஆக்சிஜன் தட்டுப்பாட்டு போன்ற பிரச்சினைகளைக் காட்டிலும் தற்போது சுடுகாட்டில் இடமில்லாததுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
டெல்லியில், கொரோனாவால் தினசரி உயிரிழப்பு 300க்கு மேல் இருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று 348பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 357 பேரும், நேற்று 380 பேரும் உயிரிழந்துள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டி செல்கிறது.
டெல்லியில் உடல்களை புதைக்க போதிய வசதியில்லாததால், உடல்கள் எரிக்கப்படுகின்றன. தற்போது தகன மேடைகளுக்கும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 28 தகன மேடைகளில் 24 மணி நேரமும் உடல்கள் எரிந்து கொண்டிருப்பதால், அங்கேயும் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடல்களை எரிப்பதற்கு சுடுகாட்டில் டோக்கன் பெற்றுக் கொண்டு நீண்ட வரிசையில் உறவினர்கள் காத்து இருக்கின்றனர். உடல்களை தகனம் செய்ய கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், டெல்லியில் உள்ள முக்கிய பூங்கா ஒன்றை சுடுகாடாக மாற்றி அங்கு உடல்களை எரிக்க மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
இந்தியாவின் நிலை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. டெல்லியில் மரண ஓலம் மட்டும் இடைவெளியின்றி கேட்டு கொண்டே இருக்கிறது.
**வினிதா**
.
�,”