sநீட் தேர்வை ரத்து செய்வதே இலக்கு: முதல்வர்!

Published On:

| By admin

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில் நீட் போன்ற நுழைவுத் தேர்வு காரணமாக இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காமல் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கின்றனர். அப்படி உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் தற்போது ரஷ்யாவின் போரால் சிக்கித் தவிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும், மாணவர் நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விக்கட்டணம் செலுத்த முடியாததால் வேறு வழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்க உக்ரைன் சென்று படித்த கர்நாடக மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுகவும், தமிழக கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போன்ற சிறிய நாட்டுக்கு ஏன் மருத்துவம் படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கான நேரம் இது அல்ல.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் ‘நீட் தேர்வை’ ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும்.அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share