சுற்றுலாத் துறை ஹோட்டல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன்

politics

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் தரமான உணவுகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று புகார்கள் இருந்துவரும் நிலையில், சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஹோட்டல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருக்கம்பட்டு பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சுற்றுலாத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் திருப்பதி ஆன்மிக சுற்றுலாவுக்கு வார இறுதி நாட்களில் சுமார் 600 பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த திருப்பதி ஆன்மிக சுற்றுலாவின்போது திருத்தணி முக்கிய இடமாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு ஹோட்டலில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தமிழ்நாடு ஹோட்டல்களையும் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments are closed.