சிஏஏ போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
சிஏஏவுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் தொடர்பாக கோபிநாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், போராட்டத்தினால் மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தி கைது செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், உத்தரவை வரும் 11ஆம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களையும் முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தினர். இந்த நிலையில் சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “போராட்டம் நடத்துவதற்கு அரசியல் சட்டம் அனுமதியளித்தாலும், போராட்டம் என்பது மக்களின் சுதந்திரத்தை பறிக்காத வகையில் இருக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டுவது போல சிஏஏ போராட்டத்தினால் தமிழகத்தில் எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், “சிஏஏ போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலோ அல்லது நடவடிக்கை எடுக்கும் வகையிலோ காவல் துறை செயல்படவில்லை. ஆகவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். சட்டவிரோத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் போராட்டக்காரர்களிடம் காவல் துறை கெஞ்சுகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்தவில்லை எனில், தமிழகத்திலும் டெல்லியில் நடந்த வன்முறை போல நடைபெறும் அபாயம் உள்ளது” என்று வாதிட்டனர். அதற்குள் நீதிமன்ற நேரம் முடிந்துவிட்டதால் வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
**எழில்**
�,