தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில், நகை மற்றும் துணிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இன்று (ஜூன் 28) காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு, மேலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு , ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கேற்ப மாவட்டங்களை மூன்று வகையாகப் பிரித்து, தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் வகை 3-ல் உள்ள நான்கு மாவட்டங்களில், நகை, துணிக்கடை மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்கவும், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் 50 சதவிகிதப் பயணிகளுடன் பொது போக்குவரத்தை இயக்கவும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு (ஜூன் 27) தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் கருத்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நகை, துணிக்கடைகள் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன், குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,